டாக்டர் கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன்: பிரதமர் மோடி இரங்கல்

இருதய மருத்துவத்தில் கே.எம்.செரியனின் பங்களிப்பு மகத்தானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்து காட்டிய மருத்துவர் கே. எம். செரியன். கேரளாவை சேர்ந்த இவர், வயது முதிர்வின் காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;
"நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம். செரியனின் மறைவால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இருதய மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் மகத்தானது. புதுமை, தொழில்நுட்பம் மீதான கே.எம்.செரியனின் முக்கியத்துவம் தனித்து நிற்கிறது. இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன" என பதிவிட்டுள்ளார்.