சித்தியை கற்பழிக்க முயன்ற 16 வயது சிறுவன்: கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்


சித்தியை கற்பழிக்க முயன்ற 16 வயது சிறுவன்: கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 Jun 2024 11:16 PM GMT (Updated: 20 Jun 2024 1:14 AM GMT)

பிரேத பரிசோதனை அறிக்கையில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடியை அடுத்த பெர்னே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பிலியூர் கிராமத்தில் 37 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். திருமணமான இவர் கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி இரவு அந்த பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் உப்பினங்கடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மாரடைப்பால் அந்த பெண் இறந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் அந்த பெண்ணின் கணவருக்கு இந்த சாவில் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் உப்பினங்கடி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அவரது அக்காள் மகனான 16 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அந்த சிறுவன் அதே பகுதியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான். இதையடுத்து போலீசார் சிறுவனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது அந்த சிறுவன், பெண்ணை கொலை செய்ததை ஒப்பு கொண்டான். அதாவது கொலையான பெண்ணும், சிறுவனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனால் சிறுவனுக்கு பெண் மீது மோகம் ஏற்பட்டது. கடந்த 16-ந் தேதி வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்போது சிறுவன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றான். ஆனால் அந்த பெண் இடம் கொடுக்கவில்லை. மேலும் சிறுவனை கண்டித்தார்.

இந்த சம்பவத்தை வெளியே கூறுவதாகவும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுவன், பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையான பெண், சிறுவனுக்கு சித்தியாகும். இந்தநிலையில் சிறுவனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story