மாநிலத்துக்குள்ளேயே 'நீட்' முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்


மாநிலத்துக்குள்ளேயே நீட் முதுகலை தேர்வு மையங்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Aug 2024 4:40 AM GMT (Updated: 6 Aug 2024 6:06 AM GMT)

முதுநிலை நீட் தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களவை தி.மு.க. எம்.பி. வில்சன் டெல்லியில் நேற்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே பி நட்டாவை சந்தித்து நீட் முதுகலை தேர்வு மையங்கள் தொடர்பான கோரிக்கையை முன் வைத்தார். அவர் அளித்த கோரிக்கை மனுவில், "வருகிற 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நீட் முதுகலை தேர்வுக்கு தொலைதூர மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தங்கள் இருப்பிடத்தில் இருந்து 1000 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தேர்வு மையங்களை மாவட்டங்களுக்குள் அல்லது குறைந்த பட்சம் அந்தந்த மாணவர்களின் மாநிலத்துக்கு உள்ளேயே மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என தெரிவித்திருந்தார். இதே கோரிக்கை பல எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் மத்திய அரசுக்கு விடுக்கப்பட்டிருந்தது.

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மருத்துவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை தமிழ்நாட்டிற்கு உள்ளேயே மாற்றி தேசிய தேர்வு முகமை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி திருச்சி மருத்துவர்களுக்கு தற்போது திருச்சி, கரூரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story