ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Aug 2024 1:22 PM GMT (Updated: 20 Aug 2024 3:27 AM GMT)

முக்கிய பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் எல்லை வழியாக ஊடுருவும் பங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதற்கு பாதுகாப்பு படை வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அப்பகுதியில் கூடுதல் படை வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது; "இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது. பயங்கரவாதிகள், எல்லையை கடக்க உள்ளூர் வழிகாட்டிகளின் உதவியை அடிக்கடி பெறுகின்றனர். பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாகும் பகுதிகளில் புதிய உக்திகளுடன் வீரர்களை களமிறக்கும் சூழல் உருவாகியுள்ளது. பயங்கரவாதிகள், காடுகளில் போர் பயிற்சி பெற்றுள்ளதுடன், அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வரும் அரசாங்கம், ஜம்மு பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அங்கீகரித்துள்ளது. இதனால் முக்கிய பகுதிகளில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளது." என்றார்.


Next Story