அரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி நாளை பதவியேற்கிறார்


அரியானா பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நயாப் சிங் சைனி தேர்வு
x
தினத்தந்தி 16 Oct 2024 8:17 AM GMT (Updated: 16 Oct 2024 12:07 PM GMT)

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

பஞ்ச்குலா:

90 தொகுதிகள் கொண்ட அரியானாவில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற்றது. காங்கிரஸ் 37 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்மூலம் பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பா.ஜ.க. தொடங்கியது. முதல்-மந்திரி நயாப் சிங் சைனியே மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-மந்திரி) நயாப் சிங் சைனி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்கூட்டத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் மற்றும் கட்சியின் மத்திய பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

சட்டமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சைனியின் பெயரை எம்.எல்.ஏ.க்கள் கிரிஷன் குமார் பேடி, அனில் விஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். இதை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர்.

இதையடுத்து நாளை நடைபெறும் விழாவில் முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


Next Story