மகா கும்பமேளாவில் புனித நீராடிய பவித்ரா கவுடா - புகைப்படங்கள் வைரல்


மகா கும்பமேளாவில் புனித நீராடிய பவித்ரா கவுடா - புகைப்படங்கள் வைரல்
x
தினத்தந்தி 31 Jan 2025 10:15 PM (Updated: 31 Jan 2025 10:16 PM)
t-max-icont-min-icon

ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கி கொன்ற வழக்கில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

பெங்களூரு,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட நடிகை பவித்ரா கவுடா திரிவேணி சங்கத்தில் புனித நீராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கி கொன்றதாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைதாகினர். இவர்களில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவித்ரா கவுடா கடந்த ஆண்டு(2024) டிசம்பர் மாதம் 17-ந் தேதி ஜாமீனில் விடுதலையானார். அதன் பின்னர் பூஜை, சாமி தரிசனம் செய்து தீவிர ஆன்மிகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தார். உடன் அவரது தோழி ஒருவரும் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பவித்ரா கவுடா, பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை பெற்று கொண்ட அவர் கங்கை ஆற்றில் படகு சவாரி மேற்கொண்டார். மேலும் அங்கு பிரபலமான உணவு மற்றும் டீக்கடைகளில் சாப்பிட்டு மகிழ்ந்தார். இதற்கிடையில் அவர் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது கும்பமேளாவில் கலந்து கொண்ட பவித்ரா கவுடா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது, சாமி தரிசனம் செய்வது, படகு சவாரி மேற்கொண்டது, டீ குடிப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி உள்ளது. வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் பவித்ரா கவுடா, ஆன்மிக பயணம் மேற்கொண்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.


Next Story