10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்... அரசின் உயர்மட்ட கூட்டத்தில் இன்று ஆலோசனை


10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள்... அரசின் உயர்மட்ட கூட்டத்தில் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 16 Oct 2024 12:09 AM GMT (Updated: 16 Oct 2024 12:15 AM GMT)

விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என்ற அச்சுறுத்தல்கள், லண்டனில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ளன என காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என அச்சுறுத்தல் விடப்படுவது கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இதுபோன்று 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நேற்று முன்தினம் கூட்டம் ஒன்று நடந்தது. இதில், விமான போக்குவரத்து அமைச்சக உயரதிகாரிகள், சி.ஐ.எஸ்.எப். மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதுபற்றி மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட பல்வேறு கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் சில அச்சுறுத்தல்கள், லண்டனில் இருந்தும், வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ளன என கூறியுள்ளார். இவற்றுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என்றும் கூறியுளளார்.

இதன்படி, சவுதி அரேபியா-லக்னோ விமானத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து சிகாகோ நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல் விடப்பட்ட நிலையில், அந்த விமானம் கனடாவுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. எனினும், சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

மும்பையில் இருந்து நியூயார்க் நகர் நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட விமானம் ஒன்று இதேபோன்றதொரு வெடிகுண்டு அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில், விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.


Next Story