பொம்மைக்காக சண்டைபோட்ட மகள்கள்... கொடூரமாக தாக்கிய தந்தை - அடுத்து நடந்த விபரீதம்


பொம்மைக்காக சண்டைபோட்ட மகள்கள்... கொடூரமாக தாக்கிய தந்தை - அடுத்து நடந்த விபரீதம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Aug 2024 1:28 AM GMT (Updated: 19 Aug 2024 1:31 AM GMT)

பொம்மைக்காக சண்டைபோட்ட மகளை, தந்தை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.

ஜாஞ்கிர்-சம்பா,

சத்தீஸ்கரில் பொம்மைக்காக சண்டைபோட்ட மகளை, தந்தை கொடூரமாக தாக்கியதில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஞ்கிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திஷான் என்ற சல்மான். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவருடன் 6 மற்றும் 8 வயது மகள்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இரண்டு மகள்களும் பொம்மைக்காக சண்டைபோட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த சல்மான் இருவரையும் மரக்குச்சியால் கடுமையாக தாக்கியுள்ளார். வலியில் துடித்த இரண்டு சிறுமிகளும் அழுதுகொண்டே சென்று படுத்துள்ளனர்.

பின்னர் இரவு உணவு சாப்பிடுவதற்காக அவர்கள் இருவரையும் சல்மான் எழுப்பியுள்ளார். இந்த நிலையில் அவரது மூத்த மகள் வலியில் துடித்துள்ளார். மற்றொரு மகள் எந்த அசைவுமின்றி இருந்துள்ளார். இதையடுத்து சல்மான் அவர்கள் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இரண்டாவது மகள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மூத்த மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சல்மானை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story