நீட் முறைகேடு விவகாரம்: மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம் - ராகுல் காந்தி


மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம்
x
தினத்தந்தி 1 July 2024 7:01 AM GMT (Updated: 1 July 2024 7:21 AM GMT)

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.

புதுடெல்லி,

3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இதில் 27ம் தேதி நடந்த இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து மறுநாளே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்குவதாக இருந்தது.

ஆனால் நீட் தேர்வு முறைகேடு குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசும் அளித்து இருந்தன.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவற்றை நிராகரித்ததுடன், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் தங்கள் பிரச்சினை குறித்து பேசலாம் என தெரிவித்தார்.

ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சி எம் பி க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதைப்போல மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் நீட் விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரும்பாலும் முடங்கின.

எனினும் மாநிலங்களவையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் தொடங்கியது. பா.ஜனதா எம் பி சுதான்ஷு திரிவேதி இந்த விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் பா.ஜனதா எம் பி கவிதா பதிதார் மற்றும் 9 உறுப்பினர்கள் பேசினர்.

இந்த நிலையில் ஜனாதிபதி உரை மீதான விவாதம் இன்று மீண்டும் இரு அவைகளிலும் தொடங்கியது. இன்று காலை மீண்டும் மக்களவை கூடியவுடன் நீட் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.

அப்போது மக்களவையில் ராகுல் காந்தி பேசுகையில், "நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு செய்தி பரப்பப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு நீட் விவகாரம் முக்கியம் என்ற செய்தியை மாணவர்கள் அனுப்ப விரும்புகிறோம். இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு அரசுத் தரப்பில் மக்களவையில் பதிலளித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்,

"சில விதிகள் மற்றும் மரபுகளின்படி நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிறகுதான் எந்த விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக மக்களவை கூடியதும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்துக்கள் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்தார்.


Next Story