ஊழலையும், முறைகேடுகளையும் மறைக்கவே மொழி பிரச்சினை - அமித்ஷா

ஊழலையும், முறைகேடுகளையும் மறைக்கவே மொழி பிரச்சினையை எழுப்புகின்றனர் என்று மத்திய உள்துறை அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூற, பாஜக மறுத்து வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதாவது: -
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை தமிழில் படிக்க வழிவகை செய்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். இந்தி எல்லா மொழிகளுக்கும் நண்பன் தான், மொழியை வைத்து அரசியல் செய்வோரை அம்பலப்படுத்துவோம். நாங்கள் மாநில மொழிகளுக்கு எதிராக இருக்கிறோம் என்று கூறுவதா?
டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுகிறேன். தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில். மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை தமிழில் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.