கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை: நீதி கேட்டு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்


கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை:  நீதி கேட்டு டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Aug 2024 11:24 AM GMT (Updated: 22 Aug 2024 11:30 AM GMT)

நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கடந்த 9-ம் தேதி காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிராக மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு கும்பல் புகுந்து சூறையாடியது. இதில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு, மருந்து அறை உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. பெண் டாக்டர் கொலையில் ஆதாரங்களை அழிப்பதற்கு நடந்த முயற்சி இது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்த வன்முறை தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த சூறையாடல் விவகாரத்தில் 3 போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு நேற்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதன்படி 2 துணை போலீஸ் கமிஷனர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது.

அப்போது பயிற்சி டாக்டர் கொலை குறித்து முதலில் விசாரித்த கொல்கத்தா போலீசாரும், இதனையடுத்து விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கிய சிபிஐ-யும் சுப்ரீம்கோர்ட்டில் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். சி.பி.ஐ. மற்றும் கொல்கத்தா போலீசார் தாக்கல் செய்த நிலை அறிக்கைகளை சுப்ரீம்கோர்ட்டு பதிவு செய்தது.

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார். ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. கொல்கத்தா டாக்டர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் டாக்டர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். டாக்டர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

இந்நிலையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டாக்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் எங்களின் கவலைகள் சுப்ரீம் கோர்ட்டால் நிவர்த்தி செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, வேலைநிறுத்தம் நிறுத்தப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கிறோம். எங்களது அனைத்து கடமைகளையும் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த அசம்பாவிதம், நம் நாட்டில் டாக்டர்கள் பணிபுரியும் வருந்தத்தக்க நிலையை எடுத்துக்காட்டுகிறது. ஆகஸ்ட் 23 ம் தேதி காலை 8 மணி முதல் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story