காசி தமிழ் சங்கமம்: சிறப்பு ரெயில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்ற வடமாநில பயணிகள்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற சிறப்பு ரெயில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்ற வடமாநில பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
தமிழகம் மற்றும் காசி இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் பனாரசுக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 பேர் இருந்தனர். இந்த ரெயில் மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே வந்த போது, முன்பதிவில்லாத டிக்கெட் வைத்திருந்த வடமாநில பயணிகள் சிலர் ரெயிலில் ஏற முயன்றனர். சிறப்பு ரெயில் என்பதால் பெட்டிகளின் கதவுகளை தமிழக பயணிகள் பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில பயணிகள் ரெயில் கதவில் உள்ள கண்ணாடியை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக கதவை திறந்து உள்ளே வர முயன்றனர். இதன் காரணமாக வெளியில் இருந்த பயணிகளுக்கும், உள்ளே இருந்த தமிழக பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.