வரவேற்பு விருந்தில் குடிநீர் தகராறு.. மோதிக்கொண்ட உறவினர்கள்: திருமணம் நிறுத்தம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மணமகனும், மணமகளும் சண்டையிட்டனர்.
பெங்களூரு
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம், ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த பேசி முடிக்கப்பட்டது. சாப்ட்வேர் என்ஜினீயர்களான இவர்களது திருமணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கு முதல்நாள் (சனிக்கிழமை) இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மண மகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமான பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்துள்ளனர். அவர்கள் சாப்பிட அமர்ந்து உள்ளனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய இந்த தகராறு நேற்று காலை வரை நீடித்தது. எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை. ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. மணமக்களே கருத்தொற்றுமை இல்லாமல் சண்டையிட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது. சாதாரண விஷயத்துக்காக திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.