கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விசாரணையின்போது 'அருணா சான்பாக்' வழக்கை குறிப்பிட்ட நீதிபதி


கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு விசாரணையின்போது அருணா சான்பாக் வழக்கை குறிப்பிட்ட நீதிபதி
x
தினத்தந்தி 20 Aug 2024 11:53 AM GMT (Updated: 21 Aug 2024 7:26 AM GMT)

மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு 'அருணா சான்பாக்' வழக்கு ஒரு எடுத்துக்காட்டு என நீதிபதி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சார்புநிலை காரணமாக பெண் மருத்துவர்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர் என்றும், நாட்டில் நிலைமை மாறுவதற்கு மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.

அதோடு, மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு 'அருணா சான்பாக்' வழக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். நீதிபதி குறிப்பிட்ட அருணா சான்பாக் வழக்கு, இந்தியாவில் மருத்துவத் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்காகும்.

கடந்த 1967-ம் ஆண்டு, 25 வயதான செவிலியர் அருணா சான்பாக், மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாய் என்பவருக்கும், அருணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், 1973-ம் ஆண்டு நவம்பர் 27-ந்தேதி, அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் சோகன்லால் பார்த்தா வால்மிகி என்பவர், அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்தார். இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருணா சான்பாக் அதே நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில், அருணா சான்பாக்கை, கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்களே கவனித்து வந்தனர்.

இதனிடையே 2011-ம் ஆண்டும் பத்திரிக்கையாளர் பிங்கி விரானி என்பவர், அருணா சான்பாக்கை கருணை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நாடு முழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், 2011-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி, இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அருணா சான்பாக் மூளைச்சாவு அடையவில்லை என்பதால் அவரை கருணை கொலை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

அதே சமயம், அருணாவின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது பாதுகாவலர்களோ கோரிக்கை விடுத்தால், கோர்ட்டு அனுமதியுடன் அருணாவிற்கான உயிர்காக்கும் கருவிகளை துண்டிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, 2015-ம் ஆண்டு மே 18-ந்தேதி நிமோனியா பாதிப்பால் அருணா சான்பாக் உயிரிழந்தார்.

மறுபுறம், அருணா சான்பாக்கை தாக்கிய சோகன்லால் பார்த்தா வால்மிகி மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி ஆகிய வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சோகன்லால் பார்த்தா வால்மிகி விடுதலை செய்யப்பட்டார்.


Next Story