மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்


தினத்தந்தி 24 July 2024 5:26 AM GMT (Updated: 24 July 2024 6:53 AM GMT)

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

டெல்லி,

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதேவேளை, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.

இதனிடையே, பட்ஜெட்டில் பீகார், ஆந்திராவை தவிர மற்ற மாநிலங்களில் போதிய அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story