குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 3 பேர் பலி


குஜராத்: 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து - 3 பேர் பலி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 March 2025 9:27 AM (Updated: 14 March 2025 10:57 AM)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்திருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பலரும் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக கட்டிடத்தின் 6வது மாடியில் தீ ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மளமள வென பரவத்தொடங்கியது.

இந்த தீயில் இருந்து அதிக அளவு கரும் புகை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்து. கட்டிடத்தில் தீ ஏற்பட்டதை உணர்ந்த மக்கள் உடனடியாக கட்டிடத்தை விட்டு வேகமாக வெளியேறத் தொடங்கினர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத்துறையினர் போராடி நண்பகல் வாக்கில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அடர்ந்த புகை காரணமாக மாடியின் மேல் தளத்தில் 40 பேர் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அங்கு சிக்கியிருந்த 5 பேரை கிரேன் உதவியுடன் மீட்புக்குழுவினர் மீட்டனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அவர்களின் உடலை மீட்ட தீயணைப்புத்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்து குறித்து நடத்திய விசாரணையில் இறந்தது கல்போஷ் லியூவா மற்றூம் மயூர் லியூவா என இருவர் அடையாளம் காணப்பட்டனர். மேலும் அந்த மூன்றாவது நபர் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story