மேற்கு வங்காளத்தில் ரெயில்கள் மோதல்: 9 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி 17 Jun 2024 4:57 AM GMT (Updated: 17 Jun 2024 12:53 PM GMT)

மேற்கு வங்காளத்தில் கஞ்சன் ஜங்கா விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால், ரெயில் நிறுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், கஞ்சன் ஜங்கா ரெயில் நின்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரெயில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சரக்கு ரெயில் முன்னால் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புறத்தில் மோதியது.

இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 3 ரெயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், "போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ரெயில்வே தரப்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி எண்கள் விவரம்:

03323508794

03323833326


Next Story