ஓட்டுநர்கள், நடத்துநர்களால் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... அதிர்ச்சி சம்பவம்


ஓட்டுநர்கள், நடத்துநர்களால் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... அதிர்ச்சி சம்பவம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 19 Aug 2024 1:57 PM GMT (Updated: 19 Aug 2024 2:30 PM GMT)

பேருந்தில் ஓட்டுநர்கள், நடத்துநர்களால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் உத்தரகாண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேராடூன்,

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த 12-ந்தேதி பேருந்து மூலம் பயணம் செய்து டெல்லி ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் வந்த சிறுமி, பஞ்சாப் செல்வது எப்படி என அங்குள்ள நடத்துநர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது தன்னுடைய பேருந்தில் ஏறுமாறு சிறுமியிடன் கூறிய அந்த நடத்துநர், டேராடூனில் இருந்து பஞ்சாப் செல்லலாம் என தெரிவித்துள்ளார். நடத்துநரின் பேச்சை நம்பி சிறுமியும் அந்த பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர். இரவு நேரத்தையும், பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் பேருந்திற்கு உள்ளேயே வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் நடத்துநர் பணத்தை கேஷ் கவுண்டரில் ஒப்படைத்தபோது நடந்த சம்பவத்தை கேஷியரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கேஷியவும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின்னர் அவர்கள் சிறுமியை பேருந்து நிலையத்திலேயே விட்டுவிட்டு சென்றனர்.

5 பேர் கொண்ட கும்பலால் பாதிப்புக்கு ஆளான சிறுமி, இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் தனியாக இருந்துள்ளார். சிறுமி இருக்கும் தகவல் குழந்தைகள் நலக் குழுவுக்கு தெரியவந்தது. இதன் பின்னரே சிறுமிக்கு உதவிக்கரம் கிடைத்துள்ளது. பேருந்து நிலையத்திற்கு வந்த குழந்தைகள் நலக்குழுவினர், சிறுமியை பாதுகாப்புக்காக அரசு பெண்கள் இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளான 5 பேரையும் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்த போலீசார், பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். பேருந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


Next Story