முதல்-மந்திரி இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்


முதல்-மந்திரி இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
x

Image Courtesy: ANI

தினத்தந்தி 4 Oct 2024 8:38 AM GMT (Updated: 4 Oct 2024 8:55 AM GMT)

முதல்-மந்திரியாக இருந்தபோது கெஜ்ரிவாலுக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்து புதிய இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் கடந்த மாதம் 13ம் தேதி திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதனைதொடர்ந்து, கெஜ்ரிவால் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக இருந்தபோது அவருக்கு அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்யும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் இன்று வெளியேறினார். இதையடுத்து அவர் ரவிசங்கர் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ள மண்டி ஹவுஸ் அருகே பெரோஸ்ஷா சாலையில் உள்ள பஞ்சாப் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

மேலும் மக்களிடமிருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெறுவதற்காக முதல்-மந்திரி பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் நம்பிக்கையை வென்று மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story