நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்- ஜி.டி.பி. வளர்ச்சி 7 சதவீதம் வரை இருக்கும்


நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 22 July 2024 7:07 AM GMT (Updated: 22 July 2024 12:01 PM GMT)

2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாட்டின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்த ஆய்வறிக்கையில், 2023-24 (ஏப்ரல் 2023-மார்ச் 2024) நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, 2025ம் நிதியாண்டில் உண்மையான ஜி.டி.பி. வளர்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

* உலகளாவிய பொருளாதார செயல்திறன் நிச்சயமற்ற நிலையில் இருந்தபோதிலும், 2024ம் நிதியாண்டில் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி இயக்கிகள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தன.

* புவிசார் அரசியல் மோதல்களின் அதிகரிப்பு மற்றும் அதன் தாக்கம் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

* உலகளாவிய பிரச்சினைகள், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் சீரற்ற பருவமழை ஆகியவற்றால் பணவீக்கம் தூண்டப்பட்டபோதிலும், நிர்வாக மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கைகளால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.

* 2023-ம் நிதியாண்டில் சராசரியாக 6.7 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், 2024-ம் நிதியாண்டில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

* உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story