தீப்பற்றியபடி சாலையில் சென்ற கார்.. வாகன ஓட்டிகள் பீதி: வீடியோ


தீப்பற்றியபடி சாலையில் சென்ற கார்.. வாகன ஓட்டிகள் பீதி: வீடியோ
x
தினத்தந்தி 13 Oct 2024 7:51 AM GMT (Updated: 13 Oct 2024 8:05 AM GMT)

ராஜஸ்தான் மாநிலத்தில் டிரைவர் இல்லாத கார் ஒன்று தீப்பற்றியபடி சாலையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோடாலா சப்ஜி மண்டி பகுதியில் உள்ள உயர்மட்ட சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை கவனித்த டிரைவர், உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். ஆனால் டிரைவர் இல்லாத அந்த கார் தீப்பற்றியபடி நகரத் தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். கார் தங்களை நோக்கி வருவதை பார்த்த அவர்கள் தங்கள் வாகனங்களை வேகமாக நகர்த்தி வழிவிட்டனர்.

சிறிது நேரம் இவ்வாறு தீப்பிழம்புடன் புகையை கக்கியபடி சென்றுகொண்டிருந்த கார், பாலத்தின் மறுபகுதி வரை சென்று டிவைடரில் மோதி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பிடித்த கார் சென்றபோது அந்த சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மின்கசிவு காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகன பாதுகாப்பு மற்றும் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


Next Story