திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்-மந்திரி வேண்டுகோள்


திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம்: உ.பி. முதல்-மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Jan 2025 5:30 AM (Updated: 29 Jan 2025 6:34 AM)
t-max-icont-min-icon

பிரயாக்ராஜ் வரும் பக்தர்கள் அருகில் உள்ள கங்கை ஆற்றில் நீராடுமாறு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராட வேண்டாம் என அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

"பிரயாக்ராஜுக்கு வரும் பக்தர்கள், உங்களுக்கு அருகிலுள்ள கங்கை ஆற்றில் நீராடுங்கள். திரிவேணி சங்கமம் நோக்கிச் செல்ல முயற்சிக்காதீர்கள். நீங்கள் அனைவரும் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஏற்பாடுகளை செய்வதில் ஒத்துழைக்க வேண்டும். சங்கத்தின் அனைத்து படித்துறைகளிலும் மக்கள் அமைதியாகக் குளித்து வருகின்றனர். எந்த வதந்திகளுக்கும் கவனம் செலுத்த வேண்டாம்" எனப் பதிவிட்டுள்ளார்.


Next Story