ஹத்ராஸ் சம்பவத்தில் முகமூடி நபர்களுக்கு தொடர்பு; போலே பாபாவின் வழக்கறிஞர் திடுக் தகவல்


ஹத்ராஸ் சம்பவத்தில் முகமூடி நபர்களுக்கு தொடர்பு; போலே பாபாவின் வழக்கறிஞர் திடுக் தகவல்
x
தினத்தந்தி 7 July 2024 4:32 PM GMT (Updated: 7 July 2024 4:35 PM GMT)

முகமூடி அணிந்த நபர்கள் தப்பியோட வசதியாக, வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன என சிங் கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி ஒன்று கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

சுராஜ் பால் என்ற நாராயண் சாகர் ஹரி என்ற போலே பாபாவை காண்பதற்காக மக்கள் திரண்டு வந்து இருந்தனர். இந்நிகழ்ச்சியின்போது, மதபோதகர் போலே பாபா கூட்டம் முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு, அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இதில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி, பலர் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதனால், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்தது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இது விபத்தோ அல்லது சதி திட்ட செயலோ எதுவாக இருப்பினும், அதன் அடிமட்டம் வரை அரசு ஆராய்ந்து செயல்பட்டு, இதற்கு பொறுப்பான நபர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படும் என கூறினார்.

இந்த சம்பவம் பற்றி விசாரிக்க ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி. சிங் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, கூட்டத்திற்கு 15 முதல் 16 பேர் அவர்களுடைய முகங்களை மூடியபடி வந்தனர். இதனை நேரில் பார்த்தவர்கள் என்னிடம் வந்து தெரிவித்தனர். முகமூடி நபர்கள் விஷ பொருட்கள் அடங்கிய கேன்களை உடன் கொண்டு வந்திருந்தனர்.

அவர்கள் கூட்டத்தில் திடீரென அதனை திறந்தனர் என்றார். தொடர்ந்து அவர், பிரேத பரிசோதனை அறிக்கையை நான் பார்த்தேன். அதில், அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் காயங்களால் உயிரிழக்கவில்லை என சிங் கூறியுள்ளார்.

அந்த நபர்கள் தப்பியோட வசதியாக, வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன. அதனை சமர்ப்பிப்போம். நான் இதுபற்றி பேசுவது இதுவே முதல் முறை என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள சிங், இது விபத்து அல்ல. கொலை என கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பெண்கள், 3 முதியவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story