கடையில் உணவு திருட முயன்ற நபரை கட்டி வைத்து, அடித்து துன்புறுத்தல்; வைரலான வீடியோ


கடையில் உணவு திருட முயன்ற நபரை கட்டி வைத்து, அடித்து துன்புறுத்தல்; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 31 Aug 2024 7:54 AM GMT (Updated: 1 Sep 2024 1:08 AM GMT)

குஜராத்தில் உணவு திருடிய நபர் மற்றும் அவரை பிடித்து, கட்டி வைத்து தாக்கிய நபர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

குஜராத்தின் கோத்ரா நகரில் கன்கு தம்பலா பகுதியில் கார் ஒன்றின் முன்பகுதி மீது இளைஞர் ஒருவரை கட்டி வைத்து, அந்த காரிலேயே சுற்றி வந்தும், அவரை அடித்து, உதைத்தும் துன்புறுத்திய வீடியோ ஒன்று வைரலானது. இதன் பின்னணி பற்றி போலீசார் விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில், அந்த நபர் உள்ளூர் கடையொன்றில் இருந்து பூச்சிக்கொல்லி மற்றும் உணவு ஆகியவற்றை திருட முயன்றிருக்கிறார். அப்போது அவரை, அந்த கடையின் உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் பிடித்து கொண்டனர்.

இதன்பின்னர், அந்நபரை அடித்து, உதைத்து உள்ளனர். பின்பு, கார் ஒன்றில் கட்டி வைத்து, தம்பலா பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளனர். இதனை சுற்றியிருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்து உள்ளனர்.

அதில் ஒரு வீடியோ, போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனை தொடர்ந்து, உணவு திருடிய நபர் மற்றும் அவரை பிடித்து, கட்டி வைத்து தாக்கிய நபர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story