கிளிமஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறி சாதனை படைத்த பஞ்சாப் சிறுவன்


கிளிமஞ்சாரோ சிகரத்தை 5 வயதில் ஏறி சாதனை படைத்த பஞ்சாப் சிறுவன்
x
தினத்தந்தி 26 Aug 2024 11:07 AM GMT (Updated: 26 Aug 2024 11:42 AM GMT)

இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.

சண்டிகர்,

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரம் உள்ளது. இந்த சிகரம், கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரத்தில் உள்ளது. இந்தநிலையில், ஆசியாவிலேயே குறைந்த வயதில் இந்த கிளிமாஞ்சாரோ சிகரத்தை தொட்டவர் என்ற சாதனையை பஞ்சாபை சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின் மீது ஏற துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23 அன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.

டெக்பீர் சிங்கின் இந்த சாதனைக்காக அவரின் தந்தையும் அவருடன் மலை ஏறியுள்ளார். தனது மகனின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது தந்தை, டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்ற பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாச பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது இந்த சாதனை எங்கள் குடும்பத்தை பெருமைப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

டெக்பீர் சிங் சாதனைக்கு அம்மாநில டிஜிபி கவுரவ் யாதவ் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெக்பீரின் உறுதியும், நெகிழ்ச்சியும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக டிஜிபி கூறியுள்ளார். அவரது சாதனை மற்றவர்களை முன்னேற ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளார்.


Next Story