மும்பை: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை


மும்பை: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2024 11:18 AM GMT (Updated: 3 Jun 2024 12:21 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் விகாஸ் ரஸ்தோகி. மாநில உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையில் முதன்மை செயலாளராக உள்ளார். இவரது மனைவி ராதிகா ரஸ்தோகி. இவரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இந்த தம்பதியின் மகள் லிபி ரஸ்தோகி (வயது27). இவர் சட்டப்படிப்பு படித்து வந்தார்.

ஐ.ஏ.எஸ். தம்பதியினர் நரிமன்பாயின்ட் பகுதியில் மந்திராலயா அருகில் உள்ள அரசு அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் லிபி ரஸ்தோகி கட்டிடத்தின் 10-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு லிபி ரஸ்தோகியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது லிபி ரஸ்தோகியின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் அவர் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட லிபி ரஸ்தோகி, கல்லூரி படிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. படிப்பில் எதிர்பார்த்த அளவில் வெற்றி கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தம்பதியின் மகள் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story