கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்


தினத்தந்தி 30 July 2024 1:40 AM GMT (Updated: 30 July 2024 6:59 PM GMT)

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வயநாட்டில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.

Live Updates

  • 30 July 2024 3:55 AM GMT

    கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில்  தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அங்கு ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் - கன்னூர் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் திரிச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லை- பாலக்காடு இடையேயான பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா வரை மட்டுமே இயக்கப்ப்டும். 

  • 30 July 2024 3:45 AM GMT

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தற்போது வரை  19 பேர் பலியாகியுள்ளனர்.நாடு முழுவதும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 30 July 2024 3:06 AM GMT

     நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் இணைந்து ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  • 30 July 2024 2:24 AM GMT

    வயநாட்டில் நிலச்சரிவு: உதவி எண்கள் அறிவிப்பு

    வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • 30 July 2024 2:20 AM GMT

    கேரளா நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் அரசு இயந்திரம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மந்திரிகள் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

  • 30 July 2024 1:53 AM GMT

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக விமானப்படை விரைந்துள்ளது.கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன. 


Next Story