ஆரோக்கியமான இதயத்திற்கு இதமான உணவுகள்


healthy foods For healthy heart
x

கடலை எண்ணெயில் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இது உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.

மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயம் ஆகும். ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை அனுப்பும் முக்கியத்துவமான பணியை செய்யும் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். எளிமையான உடற்பயிற்சியுடன் இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

உடற்பயிற்சியில் சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிட்டன், சிலம்பம், களரி, கபடி போன்ற ஏதாவதொரு உடற் பயிற்சியை 30 முதல் 45 நிமிட நேரம் அவரவர் உடல் வலிமைக்கு தகுந்தபடி செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உணவு வகைகளான சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி ,சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசிகளை உணவில் சேர்ப்பது நல்லது.

மீன்களை பொரித்து உண்ணக் கூடாது. மீன்களில் மத்திச்சாளை,டூனா, விளமீன், குழம்புகள் சிறந்தது.

காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய், கோவைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், முட்டைகோஸ், பிராக்கோலி, நெல்லிக்காய், அறுகீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, கரிசாலை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, பாலாக் கீரை , போன்ற நார்ச்சத்து நிறைந்த, கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ், பீச், பேரிக்காய், பன்னீர்த் திராட்சை, பப்பாளிப் பழம், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விதைகளில், வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை, பாசிப் பயறு, பச்சைப் பட்டாணி, கொள்ளு இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று வெள்ளை:

மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் கூடும். அவை, தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு. அத்துடன் எண்ணெய் வகைகளை அளவுடன் சேர்த்தால் வாழ்வு நலமாகும்.

எண்ணெய் வகைகள்:

நம் நாட்டின் பாரம்பரிய மரம், செடி போன்றவைகளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரபியல் அமைப்பின்படி நமக்கு நல்ல பலனைத்தரும். நமது மூதாதையர்கள் பயன்படுத்திய, மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் , கடுகு எண்ணெய் , வேர்க்கடலை எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினாலே போதுமானது.

தேங்காய் எண்ணெய் :

இதில் உள்ள லாரிக் அமிலம் உடலுக்கு இளமையையும், தோலுக்கு வளமையையும் கொடுக்கும். தலைமுடி அடர்த்தியாக வளரும். இதில் விட்டமின் ஈ சிறிதளவு உள்ளது.

நல்லெண்ணெய் :

இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது இதய இரத்தக்குழாய்களின் எலாஸ்டிக் தன்மை மாறாமல் இதயத்தைப் பாதுகாக்கும். இது கண்களுக்கு நல்லது. இதிலுள்ள லினோலிக் அமிலம் அழகைக் கூட்டும் மற்றும் ஒலியிக் அமிலம் இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றலுடையது.

கடுகு எண்ணெய் :

இதில் ஒலியிக் அமிலம், லினோலெனிக் அமிலம் அதிகமாக உள்ளது. இதில் விட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 & 6 அமினோ அமிலங்கள் உள்ளன. இவை இதயம் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளுக்கும் மிகவும் சிறந்தது.

கடலை எண்ணெய் :

வேர்க்கடலை என்பது இந்தியாவில் சுமார் 1660க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணெய் பயிராகும். இதனுடைய பிறப்பிடம் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகும். வேர்க்கடலை எண்ணெயிலும் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இதுவும் உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.

மேலும், சூரியகாந்தி விதை எண்ணெய் மற்றும் safflower oil இவை இரண்டுமே ஆஸ்டிரேசி (Asteraceae) குடும்பத் தாவரங்கள் ஆகும். இந்த எண்ணெய் நிறைவுறாத கொழுப்பு வகையைச் சார்ந்தது.

இன்னும் பருத்தி விதை எண்ணெய், பனை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏராளம் இருந்தாலும், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்தினாலே போதுமானது. எந்த எண்ணெயாக இருந்தாலும் குறைந்த அளவில் உபயோகிப்பது அனைவரது இதயத்திற்கும் நலமானது.

பூண்டு - 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

வால்நட்ஸ், அவகோடா, சியா விதைகள், ஃபிளாக்ஸ் சீட்ஸ், பூசணி விதை, வெள்ளரி விதை இவைகளை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலவங்கப்பட்டை, ஏலம், செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை டீ - யாகப் போட்டுக் குடிக்கலாம்.

கோடம் புளி (Garcinia campogia) சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

கருஞ்சீரகம், வெந்தயம் வறுத்துப் பொடித்து காலை, இரவு என இருவேளை சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

சின்ன வெங்காயம், பூண்டு இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையதால் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொலஸ்ட்ரால் உற்பத்தியாகும் இடமான கல்லீரல், நல்ல நிலையில் இயங்க கல்லீரலை வலுப்படுத்தும் கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி இவைகளை மோரில் அரைத்து வாரம் ஒருமுறை குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும். கல்லீரலின் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறும்.

சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், கொத்தமல்லி இவைகளை சம அளவில் எடுத்துப் பொடித்து வைத்துக் கொண்டு அதில், சிறிதளவு பொடி எடுத்து காலை, மாலையில் டீ போல போட்டுக் குடிக்கலாம்.

ஏலாதிச் சூரணத்துடன் குங்கிலியப் பற்பம் கலந்து, வெந்நீரில் காலை, இரவு என இருவேளை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.


Next Story