காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : பெண்கள் ஒற்றையர் பிரிவு - தொடக்க சுற்றில் வெற்றியை குவிக்கும் இந்தியா


காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : பெண்கள் ஒற்றையர் பிரிவு - தொடக்க சுற்றில் வெற்றியை குவிக்கும் இந்தியா
x

Image Tweeted By @Media_SAI  

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் - மணிகா பத்ரா இணை முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அதே போல கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த மற்றொரு தொடக்க சுற்றில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரட்டையர் பிரிவை போல ஒற்றையர் பிரிவு போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர்.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32சுற்றில் இன்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 12-10, 12-10, 4-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கரேன் லைனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதை தொடர்ந்து நடந்த பெண்களுக்கான ரவுண்ட் ஆப் 32 ஒற்றையர் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரீத் டென்னிசன் இங்கிலாந்தின் சார்லோட் பார்ட்ஸ்லியை 11-8, 10-12, 11-6, 12-10, 11-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த 2 போட்டிகளை தொடந்து நடைபெற்ற மற்றொரு தொடக்க சுற்றில் இந்தியாவின் முண்ணனி நட்சத்திரம் மனிகா பத்ரா, கனடாவின் சிங் நாம் ஃபூ-வை வீழ்த்தினார்.


Next Story