விஜய் ஸ்வீட்ஹார்ட் - பாபி தியோல்

'ஜன நாயகன்' படத்தில் நடித்துவரும் பாபி தியோல் விஜய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
விஜய் சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிமல் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமாகியுள்ள பாபி தியோல் இப்படத்தில் நடித்து வருகிறார்.
ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற பாபி தியோல் "விஜய் ஸ்வீட்ஹார்ட்டாக இருக்கிறார். மிகவும் எளிமையான, தன்னடக்கமான மனிதர். அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புதிய கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சவாலான ஒன்றைச் செய்வது பிடிக்கும். நான் தமிழில் கங்குவா, தெலுங்கில் டாகு மகராஜ் போன்ற பிற மொழி படங்களில் நடித்திருந்தாலும் அங்கு மொழியைத் தவிர எதுவும் மாறவில்லை.
கடவுள் என்மீது மிகவும் இரக்கம் காட்டுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக நிற்கிறார்கள். எனது அப்பாவினால் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறதென நினைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.நான் எந்த விருது வென்றாலும் அது ரசிகர்களுக்கானவை. ஓடிடி ஐபிஎல் போன்றது. யார் வேண்டுமானாலும் எந்த அணியில் வேண்டுமானாலும் விளையாடலாம்" என்றார்.
பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகனான இவர், 1995ம் ஆண்டு வெளியான பர்சாத் எனும் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் 2020ம் ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான கிளாஸ் ஆப் 83 எனும் தொடர் மூலம் டிஜிட்டல் உலகிற்கு அறிமுகமானார். பின், எம்எக்ஸ் பிளேயர் தயாரிக்கும் ஆஷ்ரம் எனும் வலைதொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்த வலைதொடர் தற்போது ரசிகர்களின் பேராதரவுடன் 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.