ராஷ்மிகா மந்தனாவின் 'சாவா' படத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புது டெல்லி,
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான திரைப்படம் 'சாவா'. லக்ஸ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
கடந்த 14-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 98வது அகில இந்திய மராத்தி சாகித்ய சம்மேளனத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "மராத்தி படங்களோடு இந்தி சினிமாவை உயர்த்தியது மகாராஷ்டிராவும் மும்பையும் தான். அந்த வரிசையில் இப்போது 'சாவா' படம் அலையை ஏற்படுத்தி வருகிறது. சிவாஜி சாவந்தின் மராத்தி நாவல் மூலம்தான் சாம்பாஜியின் வீரம் நமக்கு அறிமுகமானது" என்றார்.