விக்னேஷ் சிவன் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பதை பகிர்ந்த நயன்தாரா

விக்னேஷ் சிவன் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பதை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடிகை நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது உயிர் மற்றும் உலக் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையில் இவரது சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது எப்படி காதல் ஏற்பட்டது என்பதை நயன்தாரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'பாண்டிச்சேரியில் அப்போது 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். எனது படப்பிடிப்பிற்காக காத்திருந்தேன்.
விஜய் சேதுபதி சாருடன் ஒரு காட்சியைப் பற்றி விக்கி பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த காரணமும் இல்லாமல் விக்கியை வித்தியாசமாக பார்த்தேன். அப்போது அவரிடம் ஒரு அழகை கண்டேன். அவர் விஷயங்களை விளக்கும் விதம், இயக்குனராக செயல்படும் விதம் அவரை கவனிக்க வைத்தது' என்றார்
.