கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவிப்பு
![Malayalam film shoots to be suspended from June 1 Malayalam film shoots to be suspended from June 1](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38029320-sho.webp)
வரும் ஜூன் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை ரத்து செய்து ஸ்டிரைக் செய்ய கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தியும், பொழுதுபோக்கு வரி உயர்வைக் கண்டித்தும் வரும் ஜூன் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு மற்றும் திரையரங்குகளில் திரையிடல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் நடைபெறாது என கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சுரேஷ் குமார் கூறுகையில், பொழுதுபோக்கு வரியை மாநில அரசு இரட்டிப்பு செய்தது, சினிமா டிக்கெட்டுக்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதித்தது உள்ளிட்ட காரணங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிரமத்தை உருவாக்கியுள்ளது.
வரி குறைப்பு தொடர்பாக அரசிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஜூன் 1ம் தேதி முதல் படப்பிடிப்பை ரத்து செய்து ஸ்டிரைக் செய்ய முடிவு செய்துள்ளோம்.
அதேபோல, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். இது திரையுலகை பெரிதும் பாதிக்கிறது. ஒரு படத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில், 60 சதவீதம் நடிகருக்கே கொடுக்க வேண்டியதாக உள்ளது. ஜனவரியில் மட்டும் கேரள சினிமாவுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.