பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா நலமாக உள்ளார்; மகன் தகவல்

நடிகை வைஜயந்திமாலா நலமாக உள்ளார் இருப்பதாகவும், அவர் காலமானதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத் திருடன்', 'சித்தூர் ராணி பத்மினி' போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு 'நாட்டிய பேரொளி' பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் வைஜயந்திமாலா.
வைஜெயந்தி மாலா கடந்த ஆண்டு அயோத்தியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். 90 வயதாகும் நடனக் கலைஞரின் நடனத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், வைஜயந்திமாலாவின் மூத்த மகன் சுசீந்திர பாலி தனது 91 வயதான தாயார் நலமாக இருப்பதாகவும், அவர் காலமானதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.