நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்.! என்ன பிரச்சினை தெரியுமா.?


நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்.! என்ன பிரச்சினை தெரியுமா.?
x
தினத்தந்தி 24 Sep 2024 7:45 PM GMT (Updated: 25 Sep 2024 7:56 AM GMT)

காம்பவுண்ட் சுவர் பிரச்சினை தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

சென்னை,

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா தனது படப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

திரிஷா, சென்னை செனடாப் ரோடு இரண்டாவது தெருவில் உள்ள தனது வீட்டின் கட்டிடத்தை பாதிக்கும் வகையில் பக்கத்து வீட்டுக்காரரான மெய்யப்பன் பொதுவான காம்பவுண்ட் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள தடை கோரி உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த காம்பவுண்ட் சுவரை இடிக்க கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது திரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பிலும் மெய்யப்பன் தரப்பிலும் மதில் சுவர் விவகாரம் தொடர்பாக சமரசமாகப் பேசி முடிக்கப்பட்டு விட்டது, அதனால் மேற்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தற்போது திரிஷா தொடர்ந்த வழக்கை முடித்துவைத்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் திரிஷா செலுத்திய கட்டண தொகை அவருக்கு திருப்பி கொடுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story