இலங்கை அதிபர் தேர்தல்  இலங்கையில் கடந்த 2019-ம்... ... இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே?
x
Daily Thanthi 2024-09-22 01:08:54.0

இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான கோத்தபய ராஜபக்சே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார்.

பின்னர் அவர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இவர்களது ஆட்சி காலத்தில் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை எட்டியது. இதனால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் மெல்ல மெல்ல தீவிரம் அடைந்த நிலையில், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையை சுற்றிவளைத்தனர். இதன் காரணமாக கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கேயின் ஆட்சி காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீள தொடங்கியது. சுற்றுலா பயணிகளின் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் சற்று முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.


Next Story