பிணைக்கைதிகளின் இருப்பிடம் குறித்து தகவல்... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 8 ஆயிரமாக உயர்வு
Daily Thanthi 2023-10-25 12:22:10.0

பிணைக்கைதிகளின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுத்தால் பணவெகுமதி - இஸ்ரேல் பாதுகாப்புப்படை அறிவிப்பு

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு 200க்கும் மேற்பட்டோரை காசாமுனைக்கு பிணைக்கைதிகளாக கடத்தி சென்றது. பிணைக்கைதிகளில் இதுவரை 4 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.

ஆனாலும், இன்னும் 223 பேர் காசாமுனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காசாமுனைக்கு கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதிகளின் இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு பணவெகுமதி அளிக்கப்படும் என இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை வெளியிட்ட அறிக்கையில், அமைதியாக வாழவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் வேண்டுமென்றால் மனிதாபிமான செயலை உடனே செய்யுங்கள். உங்கள் பகுதியில் (காசா) உள்ள பிணைக்கைதிகளின் இருப்பிடங்கள் குறித்த நம்பத்தகுந்த, பயனுள்ள தகவலை எங்களிடம் கூறுங்கள்.

உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் இஸ்ரேல் ராணுவம் உச்சபட்ச பாதுகாப்பு வழங்கும் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறோம். உங்களுக்கு பணவெகுமதியும் கிடைக்கும். உங்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story