அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற... ... அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை:  அதிபர் பைடன் பேச்சு
x
Daily Thanthi 2024-08-20 02:20:35.0

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த சூழலில், ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார்.

எனினும், வயது முதிர்வு, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகும் முடிவை வெளியிட்டார். இதேபோன்று, கட்சிக்குள்ளே இருந்தும் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டிரம்புடனான நேரடி விவாதத்தில் எழுந்த சர்ச்சை, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தவறுதலாக அவர் கூறிய விசயங்கள் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக பைடன் அறிவித்து, அவருக்கான ஆதரவையும் வழங்கினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜனநாயக கட்சியின் 4 நாள் மாநாடு தொடங்கியுள்ளது. இதனை காண்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு முறைப்படி ஆதரவு தெரிவிக்கப்படும். இதன்படி, மாநாட்டில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முறைப்படி அறிவிக்கப்படுவார். இதனை அவர் ஏற்று கொள்கிறார்.

இதேபோன்று, துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மின்னசோட்டா கவர்னர் டிம் வால்சும் முறைப்படி வேட்பாளராக இந்த மாநாட்டில் அறிவிக்கப்படுவார்.

அமெரிக்க அதிபர் போட்டியில் இருந்து கடந்த மாதம் விலகிய அதிபர் ஜோ பைடன் இந்த மாநாட்டில் பங்கேற்று பேசுவார். அவருடன் கமலா ஹாரிசும் மேடையில் தோன்றுவார் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பாரக் ஒபாமா மற்றும் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய கமலா ஹாரிஸ், ஜோ பைடனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.


Next Story