செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு


செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Aug 2024 1:41 AM GMT (Updated: 11 Aug 2024 4:39 AM GMT)

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. எனினும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் நேற்று எக்ஸ் தளத்தில் "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது" என பதிவிட்டது.

இந்த நிலையில், செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story