சந்திரயான் 3 வெற்றி: பிரதமர் மோடி பெங்களூரு வருகை; சிறப்பான வரவேற்பு


சந்திரயான் 3 வெற்றி:  பிரதமர் மோடி பெங்களூரு வருகை; சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:08 AM GMT (Updated: 26 Aug 2023 2:33 AM GMT)

சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க பிரதமர் மோடி பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார்.

பெங்களூரு,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.

லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகளும் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது, தென்ஆப்பிரிக்காவில் பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன், அதன் தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே பேசி வாழ்த்தும் தெரிவித்து கொண்டார்.

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கல வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார். அவர், காலை 7 மணிக்கு இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கிறார்.

அவருடைய வருகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கூடியிருந்த மக்கள் முன் பேசும்போது, உங்களையும், வெற்றி பெற்ற விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு, என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.

விண்கல வெற்றியின்போது, நான் வெளிநாட்டு பயணத்தில் இருந்தேன். அதனால் என்னால், விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை.

அதனால்தான் நாடு திரும்பிய உடனே, பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிற்னே. விஞ்ஞானிகளை சந்திக்க வருகிறேன் என்பதனால், முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியை வரவேண்டாம் என கூறினேன்.

நான் பெங்களூருவுக்கு வரும்போது, முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன் என்று பேசியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கும் அவர், இஸ்ரோ மையத்திலேயே ஒரு மணிநேரம் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.


Next Story