அவர்களை குறைத்து மதிப்பிட கூடாது - ரோகித் சர்மாவை எச்சரித்த இந்திய முன்னாள் வீரர்கள்

இந்தியா - வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

Update: 2024-08-31 04:24 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் வங்காளதேசத்தை குறைத்து மதிப்பிடாமல் இந்திய அணியினர் தயாராக வேண்டும் என கேப்டன் ரோகித் சர்மாவை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "டெஸ்ட் போட்டிகளுக்கான அணி தற்போது உருவாக்கப்படும். நமது டாப் வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாட உள்ளது பிசிசிஐ எடுத்த நல்ல முடிவு. அதில் உங்களுக்கு பல விஷயங்கள் தெரிய வரும். வங்காளதேசத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நல்ல ஸ்பின் பவுலிங் அட்டாக்கை கொண்டுள்ள அவர்களிடம் நீண்ட காலமாக விளையாடும் சில தரமான வீரர்கள் உள்ளனர். எனவே வங்காளதேச தொடர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு தயாராக நல்ல பயிற்சியாகவும் இருக்கும்" என்று கூறினார்.

அதே நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங் பேசியது பின்வருமாறு:- "அது நல்ல தொடராக இருக்கும். இந்திய அணியிடம் நிறைய திறமை இருக்கிறது. இருப்பினும் வங்காளதேசத்தை நாம் எளிதாக தாண்டி செல்ல முடியாது. அவர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளனர். சில நேரங்களில் அப்படி சிறிய அணிகள் நன்றாக விளையாடி பெரிய அணிகளை தோற்கடித்து விடும்" என்று கூறினார்.

இவர்கள் கூறுவதுபோலவே வங்காளதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்