விஷ சாராய சம்பவத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகின்றன - தி.மு.க. குற்றச்சாட்டு

விஷ சாராய சம்பவத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது போல், நாங்கள் திசைதிருப்பவில்லை என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Update: 2024-06-24 10:34 GMT

சென்னை,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.

அப்போது, "கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது. விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவும் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்க்கட்சி தலைவர் நாடகமாடுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கேட்கும் எடப்பாடி பழனிசாமி. நான் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு சென்று தடை வாங்கியது எதற்காக?

திடீரென சிபிஐ மீது எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி நம்பிக்கை வந்தது? சிபிசிஐடி மீது ஏன் அவர் சந்தேகப்படுகிறார்? காவல்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை களங்கப் படுத்துகிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பி பிரச்சினை செய்ய வேண்டும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறார்.

1971 ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வந்தது என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அக்காலகட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிக அளவில் நடந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலேயே கள்ளச்சாராய விற்பனை இருந்தது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெற்று வந்ததால் கள்ளச்சாராய மரணங்களை தடுப்பதற்காக மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆகவே வரலாறு தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்