லட்டு விவகாரம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம்

லட்டில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாந்தி யாகம் செய்யப்பட்டது.

Update: 2024-09-23 05:59 GMT

திருப்பதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் ஆகம ஆலோசனை குழு கூட்டம் தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதற்காக கோவிலை சுத்தப்படுத்தி, பரிகார பூஜை, சாந்தி யாகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏழுமலையான் கோவிலின் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் காலை 6 மணிக்கு தொடங்கிய சாந்தி யாகம் காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்