எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்

கொள்ளு 10 கிராமுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடித்தால் எலும்பு வலுவடையும்.

Update: 2024-07-02 07:33 GMT

எலும்பு வளர்ச்சிக்கும், வலுவுக்கும் ஏற்ற உணவுகள் மற்றும் பயிற்சிகள்:

1. உணவுகளில் பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், எள், முட்டைக்கோஸ், பிரக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகள்.

2. கீரைகளில்: வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி கீரை போன்றவைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

3. நாம் உண்ணும் உணவில் சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, அத்திப்பழம், பேரீட்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது.

4. தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் பால் ஒவ்வாமை உடையவர்கள் பாலுக்கு பதிலாக சோயா பால், பீன்ஸ், பாதாம் பால் சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான 1 கிராம் கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.

கொள்ளில் சோயாவுக்கு இணையாக கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி, தேவையற்ற கொழுப்பு, சதையை குறைக்கும்.

கொள்ளு - 10 கிராம், மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்துக் குடிக்க வேண்டும்.

5. ஒரு கிராம் குங்குமப் பூவை, 100 மிலி தேங்காய் எண்ணெயில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அதை இரண்டு துளி உள்ளுக்கு கொடுத்தும், உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலில் நடைபயிற்சி செய்து வந்தால் "விட்டமின் டி" உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.

6. எலும்பொட்டிக் கீரை என்றழைக்கப்படும் ஒரு கொடி வகை தாவரம்: இந்தச் செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட வேண்டும்.

7. பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால், இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தொண்டை காறல் வரும், ஆகவே பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

8. எலும்பு முறிவுக்குப் பின்பு எலும்பை வலுவாக்கும் தைலம்:

தேவையான பொருட்கள்: பிரண்டைச் சாறு - 100 மி. லி, எலும்பொட்டிக் கீரைச் சாறு - 100 மி. லி, மஞ்சிட்டி - 20 கிராம், சுக்கு - 20 கிராம், நல்லெண்ணெய் - 250 மிலி. மேற்கண்ட பொருட்களை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து காய்த்து எண்ணெய் பதத்தில் எடுத்து கொள்ளவும். எலும்பு பிசகல், எலும்பு முறிவுகள், எலும்பு வலி உள்ள இடங்களில் தேய்த்து துணியால் கட்டிவர எலும்புகள் விரைவில் கூடி, வலி, வீக்கம் மறையும்.

9. சித்த மருத்துவத்தில் பவள பற்பம், முத்துப் பற்பம், முத்துச் சிப்பி பற்பம், சங்கு பற்பம், பலகரை பற்பம், போன்றவைகள் எலும்பு சார்ந்த பிணிகளுக்கு நற்பயனைத் தரும்.

 

Tags:    

மேலும் செய்திகள்