வங்காளதேசம்-அயர்லாந்து இடையிலான டெஸ்ட்: 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது

அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 107 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்து மொத்தம் 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Update: 2023-04-06 23:39 GMT

Image Courtesy : @cricketireland twitter

மிர்புர்,

வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அயர்லாந்து 214 ரன்களும், வங்காளதேசம் 369 ரன்களும் எடுத்தன. 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்களுடன் ஊசலாடியது.

3-வது நாளான நேற்று அயர்லாந்தின் பேட்டிங் வியப்பூட்டியது. அறிமுக வீரரும், விக்கெட் கீப்பருமான லோர்கன் டக்கெர் சதம் அடித்து அசத்தினார். டெஸ்டில் சதம் விளாசிய 2-வது அயர்லாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற டக்கெர் 108 ரன்களில் (162 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

அவருக்கு ஹாரி டெக்டர் (56 ரன்), ஆன்டி மெக்பிரின் (71 ரன், நாட்-அவுட்) நன்கு ஒத்துழைப்பு தந்ததால் அயர்லாந்து சரிவில் இருந்து வலுவாக மீண்டெழுந்தது. நேற்றைய முடிவில் அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 107 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்து மொத்தம் 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்