2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி 235 ரன்கள் குவிப்பு!

இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.

Update: 2023-11-26 15:22 GMT

image courtesy; twitter/ @BCCI

திருவனந்தபுரம்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் முதலிலேயே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின் களமிறங்கிய இஷான் கிஷன் தனது அதிரடி பாணியிலேயே விளையாடி ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டார். அதிரடியாக விளையாடிய கிஷனும் 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கெய்க்வாட் 58 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்