உக்ரைன் ராணுவத்திற்கு அபாயகரமான 'கிளஸ்டர்' குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசனை

உக்ரைன் ராணுவத்திற்கு ‘கிளஸ்டர்’ குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2023-07-07 12:13 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷியாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. இதனிடையே உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த சூழலில் ரஷியாவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு ஆயுத உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். போர் தொடங்கி 500 நாட்களை நெருங்கும் நிலையில், தற்போது 'கிளஸ்டர்' ஆயுதங்களுக்கான தேவை வலுத்திருப்பதாக கூறி அவற்றை வழங்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஜெலன்ஸ்கி அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு அபாயகரமான 'கிளஸ்டர்' குண்டுகளை வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'கிளஸ்டர்' குண்டு எனப்படும் கொத்து குண்டுகள் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதமாக பார்க்கப்படுகின்றன. இவை வெடித்துச் சிதறும் போது அதில் இருந்து பல குண்டுகள் காற்றில் சிதறும். அந்த குண்டுகள் மோசமான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் இதுபோன்ற ஆயுதங்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என 100 நாடுகள் கையொப்பமிட்டன. ஆனால் இவற்றால் ஆபத்து அதிகம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறி அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் மற்றும் இந்தியா ஆகியவை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்