உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

துருக்கியில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

Update: 2022-07-22 03:10 GMT

அங்காரா(துருக்கி):

உக்ரைனில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷியா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் துறைமுகங்களில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடப்பதால் தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷியாவால் தடை செய்யப்பட்ட உக்ரைன் கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதி தடுக்கப்பட்டதால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டது. உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுத்திருப்பதால், அதை சீர் செய்ய இரு நாடுகளும் போருக்கு மத்தியில் ஒரு சமரச தீர்வுக்கு வந்துள்ளன.

இருநாட்டு போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷியாவும் இன்று (ஜூலை 22) ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

உலகளாவிய உணவு நெருக்கடியிலிருந்து விடுபட உதவும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போரிடும் இருதரப்புகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த முதல் பெரிய ஒப்பந்தம் இதுவாகும்.

இந்தப் போரினால் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, உலகின் சில ஏழ்மையான நாடுகளில் உள்ள மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இந்த ஒப்பந்தம் நிகழ்ச்சிக்காக நேற்று துருக்கிக்கு வந்தார்.

துருக்கி செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் கலின் கூறுகையில், "உலக உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியமான தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் இஸ்தான்புல்லில் (வெள்ளிக்கிழமை) அதிபர் (ரெசெப் தையிப்) எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் ஆகியோரின் முன்னிலையில் உக்ரேனிய மற்றும் ரஷிய பிரதிநிதிகளுடன் இணைந்து கையெழுத்திடப்படும்" என்றார்.

இதற்கு முன்னதாக கடந்த வாரம் துருக்கியின் இஸ்தான்புல்லில், துருக்கி மற்றும் ஐ.நா அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷிய தரப்பினரின் இராணுவப் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த முதல் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உணவு ஏற்றுமதி தடையை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் முதற்கட்ட வரைவு கொண்டு வரப்பட்டது.

உக்ரைனில் உள்ள ஒடெசா, பிவ்டென்னி மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய மூன்று துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி நடைபெறும். மேலும் எதிர்காலத்தில் அவற்றை பல துறைமுகங்களுக்கு விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறோம். எனினும், ரஷியாவின் அச்சுறுத்தல் தொடரும் என்று சந்தேகிக்கப்படுவதால் இந்த ஏற்றுமதிகளின் பாதுகாப்பு ஐ.நா. கண்காணிப்புக் குழுவால் கண்காணிக்கப்படும் என்று உக்ரைன் பிரதிநிதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்