உலக மக்களின் பசியுடன் விளையாடும் விளையாட்டை ரஷியா நிறுத்தி கொள்ள வேண்டும்: உக்ரைன்

உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

Update: 2023-07-20 12:40 GMT

 நியூயார்க்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பால் உலக நாடுகளில் விலைவாசி உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால், வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

எனினும், ஐ.நா. மற்றும் துருக்கி உதவியுடன் கருங்கடல் தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தி நிலைமையை உக்ரைன் சீர் செய்தது. இதனால், உலக நாடுகளுக்கு உணவு பொருட்கள் சென்றடைவதற்கான வழியேற்பட்டது.

இந்நிலையில், உக்ரைனின் கடல் துறைமுகங்களான ஒடிசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷியா தாக்கி உள்ளது என உக்ரைன் குற்றச்சாட்டு கூறியுள்ளது.

உக்ரைனின் 3-ல் 2 பங்கு ஏற்றுமதி வளர்ந்து வரும் நாடுகளுக்கு செல்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள உணவு பாதுகாப்பற்ற சூழலில் சிக்கியவர்களுக்கும் அவை கொண்டு செல்லப்படுகிறது.

3.3 கோடி மெட்ரிக் டன்கள் வேளாண் பொருட்கள் ஏறக்குறைய 45 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என அது பற்றிய உக்ரைன் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும், கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் ரஷியா விலகி உள்ளது. இது குறைந்த வருவாய் கொண்ட எண்ணற்ற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

ரஷியாவின் நடவடிக்கையால், உக்ரைனின் ஏற்றுமதியை சார்ந்திருக்கும் பல நாடுகள் நீண்ட காலம் அதற்காக காத்திருக்க கூடிய சூழல் எழுந்துள்ளது. உக்ரைனிய விவசாயிகள் அடுத்த ஆண்டு குறைந்த அறுவடைகளை மேற்கொள்ளவும் திட்டமிட இது வழிவகுக்கும்.

இதனால், ரஷியா மீண்டும் இந்த ஒப்பந்தத்தில் இணைய முற்பட்டாலும் கோடிக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பின்மை தொடர்ந்து நீடிக்கும்.

இதுபற்றி உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியதில் இருந்து, உலகளாவிய உணவு பாதுகாப்பு பற்றிய அதன் உண்மையான நோக்கம் வெளிப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

உலக மக்களின் பசியுடன் விளையாடும் விளையாட்டை ரஷியா நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பை அழிக்கும் உரிமை உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாது என்றும் உக்ரைன் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்