நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவு - புதின் எச்சரிக்கை

நேட்டோவுடனான நேரடி மோதல் உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-10-14 21:40 GMT

Image Courtesy: AFP

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 234-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.

போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்.

கஜகஸ்தான் பயணத்தின் போது ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

ரஷியா - உக்ரைன் இடையேயான உறவில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கூட்டாளிகள் கவலைபடுகின்றனர். இதில், எதிர்பாராதது எதுவும் இல்லை என்பது உண்மை. எங்களின் கண்ணோட்டம் குறித்து எங்கள் கூட்டாளிகளுக்கு நான் உரிய தகவல் கொடுத்து வருகிறேன். ஆனால், அது ரஷியா அதன் கூட்டாளி நாடுகளுடன் கொண்டுள்ள மதிப்பு, நட்பின் ஆழத்தை பாதிக்காது.

அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டுமென இந்தியா, சீனா கூறி வருகின்றன. இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய நட்பு நாடுகள், கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், உக்ரைனின் நிலைப்பாட்டையும் நாங்கள் அறிவோம். அவர்கள் பேச்சுவார்த்தை வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்பதை அதிகாரப்பூர்வ முடிவாக எடுத்துள்ளனர்.

உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல. ரஷிய ராணுவத்துடன் நேட்டோ படைகளை போரிட நேரடியாக களமிறக்குவது மிகவும் ஆபத்தான நடவடிக்கை. இது உலகளாவிய பேரழிவுக்கு வழிவகுக்கும். இது குறித்து பேசுபவர்கள் ரஷிய படையுடன் நேட்டோவை நேரடியாக களமிறக்கும் முடிவை எடுக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்